25/06/2026
அரிதிலும் அரிது மனிதனாகப் பிறப்பது. இந்த உலகில் மீண்டும் மனித பிறப்பு கிடைக்குமா என்பது யாருக்கும் தெரியாது. எனவே கிடைத்த இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நாம் மதித்து, சரியாக வாழ வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் போன்றது. அதில் பல பக்கங்கள் உள்ளன. ஒரு சில பக்கங்களை மட்டும் பார்த்து முழு கதையையும் முடிவு செய்ய முடியாது. அதேபோல், வாழ்க்கையில் வரும் ஒரு சில கஷ்டங்கள் தான் முழு வாழ்க்கையும் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று இள வயதினரிடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருகின்றன. மன அழுத்தம், தோல்வி பயம், குடும்ப பிரச்சினைகள், கல்வி அழுத்தம், சமூக ஒப்பீடு மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் போன்ற பல காரணங்கள் இதற்கு காரணமாகின்றன.
இதில் முக்கியமான காரணமாக பெற்றோர் பிள்ளைகளை அவர்களின் வயதிற்கு ஏற்ற சவால்களை எதிர்கொள்ள விடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிள்ளைகள் சிறிய பிரச்சினைகளையும் தனியாக சமாளிக்க முடியாமல் வளர்கின்றனர். வாழ்க்கையில் சவால்கள் வந்தால் மனம் உடைந்து போகும் நிலை உருவாகிறது.
மேலும், பல குடும்பங்களில் திறந்த உரையாடல் இல்லாததால் பிள்ளைகள் தங்களுடைய உணர்வுகளை பகிர முடியாமல் உள்ளுக்குள் வைத்துக் கொள்கிறார்கள். இது மனச்சோர்வை அதிகரித்து ஆபத்தான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது.
எனவே பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இளைஞர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சுயமாக சிந்திக்கவும், பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
வரலாறு வழிகாட்டும் எம் வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும். அதற்கு முன் அடுத்த சந்ததி இருக்க வேண்டும்; இருந்தாலும் அவர்கள் வலிமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.