07/05/2018
😍
திருச்சியைச் சேர்ந்த 17 வயதே ஆன வில்லெட் ஓவியா, மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக நாட்டமும் கொண்டிருக்கிறார்.
கைக்குள் அடங்கும் "கலாம்' துணைக்கோளைத் தொடர்ந்து இதோ "அனிதா' துணைக்கோள் தயாராகி விட்டது. உருவாக்கியிருப்பவர் வில்லெட் ஓவியா.
திருச்சி ஆர். எஸ். கே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி. வயது பதினேழு .
பிளஸ் டூ தேர்வுகள் எழுதிவிட்டு, "நீட்' தேர்வுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வில்லெட் ஓவியா, தான் உருவாக்கிய துணைக் கோள் பற்றி சொல்கிறார்:
""சில ஆண்டுகளுக்கு முன், விவசாயத்திற்கு நவீன முறையில் சிக்கனமாக நீர்ப்பாசனம் எப்படி செய்யலாம் என்பது குறித்த திட்டத்தை டாக்டர் கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை கலாம் சார் பாராட்டினார். தூர்தர்ஷன் பொதிகை சானலில் "ஏழாம் அறிவு' என்ற அறிவியல் போட்டித் தொடர் நடைபெற்றது. அதில் நானும் பங்கு பெற்றேன். நிகழ்ச்சியின் முடிவில் முதல் ஏழு பேர்களில் ஒருத்தியாக என்னால் வர முடிந்தது . அந்த நிகழ்ச்சிதான் என்னை துணைக் கோள் குறித்து சிந்திக்கச் செய்தது. அதன் காரணமாக மின்னணுவியல், மின்னியல் தொடர்பாக படிக்க ஆரம்பித்தேன்.
சுற்றுப்புறச் சூழலால் காற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகமாகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுகள் அதிகமாவதால் பல நோய்க்கு காரணம் தெரியாமலேயே இரையாகிறோம் . "காற்றில் மாசுகள்' குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த துணைக்கோளை வடிவமைத்தேன். பூமியைச் சுற்றியிருக்கும் வாயு மண்டலம் பூமி வெப்பம் அடைவதால் எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது... தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு துணைக் கோள் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். வாயு மண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ûஸடு, கார்பன் மோனாக்சைடு, ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிய துணைக்கோள் உதவும். "நீட்' தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதாவின் நினைவாக எனது துணைக் கோளுக்கு "அனிதா - சாட்' என்று பெயரிட்டேன்.
இந்த துணைக்கோளைத் தயாரிக்க மூன்று ஆண்டுகள் பிடித்தது. "அனிதா' துணைக்கோள் ஆறு அங்குல நீளம், அகலம், உயரம் கொண்டு கன சதுர (CUBE ) வடிவில் இருக்கும். எடை சுமார் நானூறு கிராம். இந்த துணைக் கோளைத் தயாரிப்பதில் எல்லா வகையிலும் உதவியவர் அக்னீஷ்வர் ஜெயப்ரகாஷ். சென்னை "IGNITE -INDIA' மற்றும் "அக்னி ஃபவுண்டேஷன்' அமைப்புகளின் தலைவர். துணைக்கோளுக்கு தேவையான பாகங்களை வாங்கவும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உதவியது. இந்த துணைக் கோளை கூம்பு வடிவில் இருக்கும் கருவியில் வைக்கப்பட்டு ஹீலியம் பலூன் மூலம் பறக்க விடப்படும். இந்த நிகழ்வு வரும் மே 6-ஆம் தேதி மெக்சிகோவில் நடைபெறவுள்ளது. இந்த துணைக் கோளை உருவாக்க சுமார் ஒன்றே கால் லட்சம் செலவானது. அதனையும், துணைக்கோள் விண்வெளியில் செலுத்தப்படும் செலவையும் அக்னீஷ்வர் ஜெயப்ரகாஷ் சார் ஏற்றுக் கொண்டுள்ளார்.