09/12/2021
மூலவினை தீர்க்கும் வைத்தியன் சேவகன் கண்டாய்
மூவாமூர்த்தி முதுகயிலை மலையான் தொண்டன் கண்டாய்
பால்தயிர்சேர் ஆவைந்தும் மகிழ்ந்து ஆட்டுவித்தான் கண்டாய்
பன்னாள் ஆலின்கீழறம் உரைத்தானின் மாணவன் கண்டாய்
மாலிற்கு சுடராழி வீழியில் அளித்த நாதனின் நம்பன் கண்டாய்
மற்றோர் பற்றிலா அன்பர்தம் அன்பன் கண்டாய்
நல்லானை நெடுங்களம் நீங்காத சுந்தரன் கண்டாய்
நாவிரைக்க அவன்நாமம் உரைத்து அடியேன் உய்ந்தேன் கண்டாய்
---------- --------- ---------
எம்பிரான் அப்பர் சுவாமிகள் நினைக்க முக்தியருளும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள மலைமேல் செலுஞ்சுடரை தரிசித்து பண்ணார் பதிகத் தமிழ்பாடிப் பணிந்து பரவிப் பணிசெய்தது சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் வாயிலாக..
நாதர் மருவுந் திருமலைகள்
நாடும் பதிகள் பலமிகவும்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக்
கலந்த இசைவண் டமிழ்பாடி
மாதொர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
வண்ணா மலையை நண்ணினார்.
- திருநாவுக்கரசர் புராணம் - 311.
செங்கண் விடையார் திருவண்ணா
மலையைத் தொழுது வலங்கொண்டு
துங்க வரையின் மிசையேறித்
தொண்டர் தொழும்புக் கெதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து
திளைத்துத் திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்.
- திருநாவுக்கரசர் புராணம் - 312.
அண்ணா மலைமேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர்தங்
கண்ணார் அமுதை விண்ணோரைக்
காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
பணிந்து பரவிப் பணிசெய்தார்.
- திருநாவுக்கரசர் புராணம் - 313.
---------- --------- ---------
நான்காம் திருமுறை.
தலம் - திருவண்ணாமலை.
63 வது திருப்பதிகம்.
பாடல் எண் : 1
ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.
விளக்க உரை :ஓதி மா மலர்கள் தூவி உமையவள் பங்கா :
ஓதி மா மலர்கள் தூவி - எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் தூய நல்திரு நாமம் ஓதியும், அருளாளர்கள் அருளிச்செய்த திருமுறைகள் மற்றும் சாத்திர நூல்கள் ஓதியும், வேதங்கள் ஓதியும் மனம்,மொழி, மெய்களால் ஒன்றி பூசனைக்கு உண்டான தகுந்த நறுமலர்களை கொண்டு அர்ச்சித்தும் வழிபடல் வேண்டும்.
"எந்தெந்த மலர்களை கொண்டு, எக்காலத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று ஸ்ரீ கமலைஞான பிரகாசர் அருளிச்செய்துள்ள புட்பவிதி என்னும் நூலில் காணலாம்."
உமையவள் பங்கா - உமையன்னை தவம் செய்து இறைவனின் ஒரு பாகத்தை பெற்ற தலம் திருவண்ணாமலை ஆகும்.
உமையன்னைக்கு தன்னில் ஒரு பாகத்தை அளித்து உண்ணாமலை யஉமையாளொடு உடனாகிய ஒருவனாகிய பெருமான்.
மிக்க சோதியே துளங்கும் எண்தோள் சுடர் மழுப்படையினானே :
மிக்க சோதியே - சுடர்விட்டெரியும் சோதியாக விண்ணும், மண்ணும் நிறைந்து விளங்கும் அண்ணாமலை அண்ணலே..
துளங்கும் எண்தோள் சுடர் மழுப்படையினானே - அழகாக விளங்கும் எட்டு தோள்களுடன் ஒளிவீசுகின்ற கூர்மையுடைய மழுவினை ஆயுதமாக கொண்டவரே..
ஆதியே அமரர் கோவே அணி அண்ணாமலை உளானே :
ஆதியே அமரர் கோவே - அனைத்திற்கும் ஆதி மூர்த்தியே, முப்பத்து முக்கோடி தேவர்களின் அரசராக விளங்குபவரே..
அணி அண்ணாமலை உளானே - இது அடி அண்ணாமலையினை குறித்தது இல்லை.
தமது அடியவர்கள் அணுகி வழிபடும் படியும் மற்றோர் அணுக இயலாதபடி இருப்பவரான அண்ணாமலை அண்ணல் ஆகும்.
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே :
வேத, ஆகமங்கள் விதித்தபடியும், திருமுறைகள் ஓதியும் விதித்த நெறிகள்படியும் உம்மை வழிபடுவதை தவிர அடியேன் வேறெதையும் சிந்தனை செய்வதில்லை. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்கும் மெய்த்தொண்டன் அடியேன்.
------- --------- --------
முழுவதும் ஓர் தொகுப்பாக:
எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் தூய நல்திரு நாமம் ஓதியும், அருளாளர்கள் அருளிச்செய்த திருமுறைகள் மற்றும் சாத்திர நூல்கள் ஓதியும், வேதங்கள் ஓதியும் மனம்,மொழி, மெய்களால் ஒன்றி பூசனைக்கு உண்டான தகுந்த நறுமலர்களை கொண்டு அர்ச்சித்தும் வழிபடுகிறோம்.
உமையன்னைக்கு தன்னில் ஒரு பாகத்தை அளித்து உண்ணாமலை யஉமையாளொடு உடனாகிய ஒருவனாகிய பெருமானே..
சுடர்விட்டெரியும் சோதியாக விண்ணும், மண்ணும் நிறைந்து விளங்கும் அண்ணாமலை அண்ணலே..
அழகாக விளங்கும் எட்டு தோள்களுடன் ஒளிவீசுகின்ற கூர்மையுடைய மழுவினை ஆயுதமாக கொண்டவரே..
அனைத்திற்கும் ஆதி மூர்த்தியே, முப்பத்து முக்கோடி தேவர்களின் அரசராக விளங்குபவரே..
அடியவர்கள் எளிதில் அணுகி வழிபடும் படியும் மற்றோர் அணுக இயலாதபடி இருப்பவரான அண்ணாமலை அண்ணலே..
வேத, ஆகமங்கள் விதித்தபடியும், திருமுறைகள் ஓதியும் விதித்த நெறிகள்படியும் உம்மை வழிபடுவதை தவிர அடியேன் வேறெதையும் சிந்தனை செய்வதில்லை. தேவரீர் அடியோங்களை காத்தருளுங்கள்.
------- -------- ------
*தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது*
*பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி*
*எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே*
*நெடுங்களத்தான் பாதம் நினை.*
நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்
அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசரே 🙏🙏🙏
உலகின் முதல்வர் எம் பெருமான் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்
ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையே ஆத்ம நமஸ்காரம்