31/12/2024
*🌻 காலை ஜெபம்*
*ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.*
*அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!*
*அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!*
*ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!*
*அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.*
(திருப்பாடல்கள் 105:1-5)
*படைப்புகளின் பரம்பொருளே! உயிர்களின் ஊற்றே இறைவா! உம்மை புகழ்ந்து ஆராதிக்கின்றேன். இந்த இனிய காலை வேளையில் உம்மை நினைத்து ஜெபிக்கும் வரம் தந்த மேலான இரக்கத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.*
*இன்றைய நாளை ஆசீர்வதியும் அப்பா. இன்று நான் கையிட்டு செய்கின்ற செயல்களை, கடமைகளை ஆசீர்வதியும். நான் காண்கின்ற நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அயலார்களையும் நிறைவாக ஆசீர்வதியும் அப்பா.*
*அன்பு ஆண்டவரே! கடந்து செல்ல இருக்கும் ஆண்டை நினைத்து பார்க்கின்றேன். எத்தனையோ வலிகள், துன்பம், இழப்பு, வேதனைகள். ஆனாலும் அப்பா! இந்த ஆண்டு முழுவதும் என்னை, உமது வல்லமையால் வழிநடத்தி பாதுகாத்த, உமது இரக்கத்தை நினைத்து பார்க்கின்றேன். எத்தனையோ இடர்பாடுகள் வந்தபோதிலும், நீர்தாமே என்னுடன் கூடவே இருந்து, எனக்கு தேவையான ஞானத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், பொருளாதார தேவைகளையும், சமாதானத்தையும் தந்து காத்து, வழிநடத்தியதற்காக நன்றி அப்பா!*
*ஆண்டவரே! விடியலுக்காக காவலர் காத்திருப்பது போல, வருகின்ற ஆண்டினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். பிறக்க இருக்கும் புதிய வருடம், ஆசீர்வாதம் நிறைந்த ஆண்டாக எங்களுக்கு இருக்க வேண்டி, தாழ்பணிந்து பிரார்த்தனை செய்கின்றோம்.*
*இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.*